Published : 31 Mar 2025 06:02 AM
Last Updated : 31 Mar 2025 06:02 AM

தாமத பண பலன்களுக்கான வட்டி நீதிமன்றம் மூலமே பெற வேண்டும்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அதிர்ச்சி

சென்னை: தாமதமாக வழங்கப்படும் பணப்பலன்களுக்கு நீதிமன்றம் சென்றே வட்டித் தொகை பெற வேண்டும் என்ற ஆர்டிஐ தகவலால் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கப்படுவதில்லை. இதுவரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து ஆர்வலர் ஒருவர், "போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு காலதாமதமாக வழங்கப்படும் பணப்பலன்களுக்கு உரிய வட்டி அனைவருக்கும் வழங்கப்படுகிறதா அல்லது நீதிமன்ற உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா, நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட 6 சதவீத வட்டி வழங்கப்படுகிறதா, வட்டித் தொகை மொத்தமாக வழங்கப்படுகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை, "ஓய்வுபெற்றவர்களுக்கு காலதாமதமாக வழங்கப்படும் பணப்பலன்களுக்கு உரிய வட்டித் தொகை நீதிமன்ற உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டுமே தீர்ப்பில் தெரிவித்த சதவீதத்தில் ஒரே தவணையாக வழங்கப்படுகிறது" என கூறியுள்ளது.

அரசின் கடமை: இது ஓய்வூதியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓய்வூதியர்கள் சிலர் கூறும்போது, "அரசு தாமதமாக பணப்பலன்களை வழங்குகிறது. இதற்குரிய வட்டித் தொகையை செலுத்துவது அரசின் கடமை. இதற்கும் ஓய்வூதியர்களை நீதிமன்றத்துக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல" என வேதனையுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x