Published : 30 Mar 2025 02:09 AM
Last Updated : 30 Mar 2025 02:09 AM
சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயது சிறுமி, கடந்த ஜனவரி 3-ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விக்கிரவாண்டி பள்ளி வழக்கில் புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘சிறப்பு புலனாய்வு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாரர் கடந்த ஜனவரி 6-ம் தேதி அரசுக்கு மனு அளித்துவிட்டு, அரசுக்கு போதிய அவகாசம் தராமல் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்மூலம், பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை தவறாக பயன்படுத்தியுள்ளார். குற்றச்சாட்டுகள் பொத்தாம் பொதுவாக உள்ளன. செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அதற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் எப்படி குறைகூற முடியும்’’ என்று கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ‘வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றாலும்கூட, அவரது மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும்’ என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment