Published : 30 Mar 2025 01:02 AM
Last Updated : 30 Mar 2025 01:02 AM
சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர்களை பொதுத் தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்தது.
இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னை மாவட்டத்தில் 296 தேர்வு மையங்களில் 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப். 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கிடையே வழக்கமாக பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர்களாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். ஆனால், 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதேநேரம் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்கள் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘பொதுத்தேர்வு பணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும். தேர்வு பணிக்கு வராமல் இருந்தால் அந்த பள்ளி நிர்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, பொதுத் தேர்வு பணிக்கு தங்கள் ஆசிரியர்களை தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்பிவைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment