Published : 29 Mar 2025 05:46 AM
Last Updated : 29 Mar 2025 05:46 AM

கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள்; நான் தொண்டனாக வேலை செய்யவும் தயார்: அண்ணாமலை

கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள் என்றும் அதிமுகவுடன் எந்த மோதல் போக்கும் இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து மீனவர் பிரச்சினை, பாஜக உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

தமிழக பாஜகவின் வளர்ச்சி, கட்சியில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது குறித்து அமித் ஷா, ஜெ.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினோம். 2026 சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்துக்கு மிக முக்கியமான தேர்தல். கூட்டணிக்கான நேரம், காலம், அவகாசம் இன்னும் நிறைய இருக்கிறது. அதனால் கூட்டணியை பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், அதற்கான அடிமட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கட்சி வளர்ச்சியைவிட தமிழக மக்களின் நலன் மிக முக்கியம். கூட்டணி சம்பந்தமாக தகுந்த நேரத்தில் பாஜக தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள். கூட்டணி தொடர்பாக மாநில தலைவராக எனது கருத்தை அவர்களிடம் கூறியிருக்கிறேன். அதிமுகவுடன் எந்த மோதல் போக்கும் இல்லை. நான் என் கட்சியை வளர்ப்பதற்காக தான் உழைக்கிறேன். நான் தொண்டனாக வேலை செய்யவும் தயார். என்னால் யாருக்கும் தொந்தரவு வராது.

எங்களுடைய எதிரி திமுக மற்றும் திமுக கூட்டணிதான். அவர்கள் ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும். கட்சி தொடங்கி ஒன்றறை ஆண்டில் மூன்று முறை மட்டுமே விஜய் வெளியே வந்துள்ளார். களத்தில் யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்வார்கள். வீரவசனம், வாய் சவடால், சினிமா வசனம் பேசாமல், களத்தில் வேலை செய்து, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்து, மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

மைக் எடுத்து பேசிவிட்டு, கை காட்டி விட்டு போவது அரசியல் அல்ல. களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். விஜய்க்கு அரசியல் புரிதல் இருக்க வேண்டும். 1973-ம் ஆண்டு காங்கிரஸ், திமுக ஆட்சியில் தொகுதி மறுசீரமைப்பின்போது, நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை 525-ல் இருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்துக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. 2026-ல் பாஜக ஆட்சியில் தொகுதி மறுசீரமைப்பு வரும்போது தொகுதி எண்ணிக்கை குறைவாக இருந்தால், எங்களை தாராளமாக கேள்வி கேளுங்கள்.

இந்தியாவில் பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். அவரை பற்றி பேசினால் தான் விஜய் மீது மீடியா வெளிச்சம் விழும். லாட்டரியில் வந்த பணத்தை வைத்து ஒருவர் திமுகவுக்கு வேலை செய்தார். பின்னர் அதே லாட்டரி பணத்தின் மூலம், விசிகவுக்கு சென்று, தற்போது தவெகவுக்கு தாவியிருக்கிறார். அவருடையை இலக்கு தவெகவை லாட்டரி விற்பனை கழகம் என மாற்றுவதாக தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x