Published : 29 Mar 2025 12:56 AM
Last Updated : 29 Mar 2025 12:56 AM

அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: பேரவையில் நடந்தது என்ன?

அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசினர். படம்: ம.பிரபு

சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அனுமதி கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். நாள் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது துறைகள் குறித்த மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளிக்க தொடங்கினார். இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து பேச எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அனுமதி கோரினார். அப்போது நடைபெற்ற விவாதம்:

பேரவை தலைவர் அப்பாவு: இன்று 4 அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டியுள்ளது. எனவே, பின்னர் நேரம் ஒதுக்கப்படும். பூஜ்ஜிய நேரத்தில் பேச வேண்டிய பொருள் குறித்து அவை தொடங்குவதற்கு 30 நிமிடம் முன்பாக பேரவை தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு, விதி. ஆனால், பேரவை 9.30 மணிக்கு தொடங்கும் நிலையில், காவல் துறை குறித்து பேச இருப்பதாக அதிமுக கொறடா 9.18 மணிக்கு கூறுகிறார். ‘30 நிமிடம் முன்பு கூறுங்கள். இதுதான் கடைசி வாய்ப்பு’ என்று ஏற்கெனவே ஒருமுறை திட்டவட்டமாக கூறியுள்ளேன்.

அமைச்சர் எ.வ.வேலு: அதிமுக ஆட்சியில் பேரவை தலைவராக இருந்த தனபால் இந்த பதிலை பலமுறை கூறியுள்ளார். அவரது வழிகாட்டுதலைதான் இப்போது பின்பற்றுகிறோம்.

அவை முன்னவர் துரைமுருகன்: பேச வேண்டியது குறித்து முன்கூட்டியே கொடுத்தால்தான் பதிலை பெற்றுத்தர முடியும். அவகாசம் தராமல் பேசினால் எங்களிடம் பதில் இருக்காது. அதுபோல பேச யாரையும் பேரவை தலைவர் அனுமதிக்க கூடாது.

இதை ஏற்க மறுத்தும், பேச வாய்ப்பு அளிக்குமாறு கூறியும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இருக்கையில் இருந்து எழுந்து நின்றார் பேரவை தலைவர்.

பேரவை தலைவர்: பேரவை தலைவர் நின்று பேசினால், உறுப்பினர்கள் அனைவரும் அமர வேண்டும் என்பது மரபு.

(அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்: பேச வேண்டியது பற்றி 30 நிமிடங்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என்பது மரபு. பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். எதிர்க்கட்சி நினைத்ததை எல்லாம் பேச அனுமதிக்க முடியாது.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு பேரவை தலைவர் உத்தரவிட்டார். கோஷமிட்டபடி அவர்களாகவே வெளியேறினர். அவர்களை நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் பொது அமைதி நிலவுகிறது. மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கின்றனர். இதனால்தான் தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தமிழகம் முன்னேற்ற பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகளையும், சூழல்களையும் தாங்கிக்கொள்ள முடியாத சில மாநில துரோக சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் கொலை, கொள்ளை போன்ற ஒருசில நிகழ்வுகளை ஊதி பெரிதாக்கி மக்களை பீதியடைய வைக்கின்றனர். மக்களின் பாதுகாப்புக்காக இரவு பகலாக உழைக்கும் காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமா என துடிக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியும் அதற்கு துணைபோகும் வகையில் தூபம் போடுகிறது.

அதிமுக ஆட்சியில் எத்தனை கலவரங்கள் நடைபெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்ற எந்த கலவரமும் இந்த ஆட்சியில் இல்லை. குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஆளுங்கட்சியினராக இருந்தாலும் வழக்கு போடப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர். இதுதான் உண்மை. இப்படி பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து காவல், துறையும் தமிழக அரசும் மக்களை பாதுகாத்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவரோ, அவர் கூட்டணி வைக்க துடித்துக் கொண்டிருக்கும் கட்சியோ, சில நேரங்களில் நடைபெறும் தொடர் சம்பவங்களை வைத்து, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மக்களை திசை திருப்ப வீண் புரளிகளை கிளப்பாமல், ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன்வாருங்கள்.

ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தலைமையிலான முந்தைய 10 ஆண்டு ஆட்சியிலும் சரி, எங்கள் ஆட்சியிலும் சரி, நடைபெறும் குற்ற சம்பவ தரவுகளை வைத்துதான் காவல் துறையின் செயல்பாட்டை அளவிட முடியும். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து, சட்டம் - ஒழுங்கு குறித்த தவறான விவாதத்தை உருவாக்க வேண்டாம். அரசு மீது குறைகள் இருந்தால் ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக, காவல் துறை மீதான மதிப்பையும், அமைதியான மாநிலம் தமிழகம் என்ற பெயரையும் கெடுப்பதற்கு துணைபோகாதீர்கள்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

பழனிசாமி கண்டனம்: சட்​டப்​பேர​வை​யில் இருந்து வெளி​யேற்​றப்​பட்ட நிலை​யில், செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறிய​தாவது: திமுக ஆட்சி பொறுப்​பெற்ற பின்​னர் கஞ்​சா, போதைப் பொருள் விற்​பனை சுதந்​திர​மாக நடக்​கிறது. பெண்​கள் பாது​காப்பு கேள்விக்​குறி​யாக உள்​ளது. இதுகுறித்து அரசின் கவனத்​துக் கொண்டு செல்​லும் பணியை நாங்​கள் செவ்​வனே செய்​கிறோம். ஆனால், மக்​களைப் பற்றி கவலைப்​ப​டா​மல், குடும்​பத்​தைப் பற்றி மட்​டுமே கவலைப்​படும் அரசாக இருக்​கிறது. முதல்​வரின் மகன் பேசுவ​தால், அவர் பதி​லுரை அளிப்​ப​தில் யாரும் தடை​யாக இருக்​கக்​கூ​டாது, அது எவ்​வளவு முக்​கிய பிரச்​சினை​யாக இருந்​தா​லும் சட்​டப்​பேர​வை​யில் பேச அனு​மதி கிடை​யாது என்ற சர்​வா​தி​காரப் போக்கை சட்​டப்​பேர​வை​யில் அரங்​கேற்றி இருக்​கிறார்​கள். மக்​கள் மகிழ்ச்​சி​யாக இருப்​பது போன்ற பொய்​யான பிம்​பத்தை ஏற்​படுத்த முதல்​வர் முயற்​சிக்​கிறார். செந்​தில் பாலாஜி அமைச்​ச​ராகத் தொடர வேண்​டுமா வேண்​டா​மா என்று பதில் சொல்​லு​மாறு உச்ச நீதி​மன்​றமே குட்டு வைத்​திருக்​கிறது. இவர்​களால் தமிழகம் தலைகுனிந்​திருக்​கிறது. இவ்​வாறு கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x