Published : 28 Mar 2025 12:06 PM
Last Updated : 28 Mar 2025 12:06 PM
சென்னை: தவெக போஸ்டர் சர்ச்சை விவகாரம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்யின் கோடான கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி.சரவணன் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதில், “தளபதி அவர்களை அழைத்து வரும், தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் அரசியல் ஆசான், தவெக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதல்வரை வரவேற்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள் தவெக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் கூறியதாவது: சில விஷமிகள் வேண்டும் என்றே என்னை முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தவெக தலைவர் விஜய்-க்கு கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர். அந்த தொண்டர்களில் நானும் ஒருவன். இதுமாதிரி 5 போஸ்டர்களை யாராவது ஒட்டினால் அதை பெரிது படுத்த வேண்டாம்.
எனது பெயரை பயன்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டால் அது நானாகிவிட முடியுமா? எனவே போஸ்டர் விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இதில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.சரவணன் கூறுகையில், “சென்னையை அடுத்த மறைமலை பகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனக்கும் இந்த போஸ்டருக்கும் சம்பந்தம் இல்லை. நானே இப்போது தான் அந்த போஸ்டர்களை பார்த்தேன். எங்களுக்கு தெரிந்தது எல்லாம் விஜய் மட்டும் தான். காழ்ப்புணர்ச்சி காரணமாக மாற்று கட்சியினர் யாராவது இதுபோல் செய்திருக்கலாம்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...