Published : 28 Mar 2025 12:10 AM
Last Updated : 28 Mar 2025 12:10 AM
திருநெல்வேலி / சென்னை: பழனிசாமி தானாகவே அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லையில் நேற்று அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கருப்பசாமி பாண்டியன் கருதினார். அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுதான். பிரிந்திருக்கும் அதிமுக ஒன்றிணைவது அவசியம்” என்றார்.
பின்னர் நெல்லையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழனிசாமி தலைமையிலானவர்கள் தவறான பொதுக்குழுவை கூட்டி இருந்ததால், நாங்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்லலாம் என்று முடிவு செய்தோம். தலைமை அலுவலகத்துக்கும், இந்தியன் வங்கிக்கும் இடையில், 8 மாவட்ட செயலாளர்கள் எங்களை வழிமறித்து, தொடர்ந்து செல்ல விடாமல் தடுத்தனர். நாங்கள் வந்த வாகனத்தை தாக்கி, ரகளை செய்தனர். இதுதான் நடந்த உண்மை.
அவர்கள் எங்களைத் தாக்கியதுடன், அவர்களாகவே தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து, அடியாட்களை வைத்து, பொருட்களைச் சேதப்படுத்தினர். ஆனால், பழியை எங்கள் மீது போட்டனர். இவை அனைத்தும் காவல் துறையின் வீடியோ பதிவில் உள்ளது.
கட்சியில் நான் மட்டும் இணைய வேண்டும் என்று கூறவில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் தெரிவித்தேன். அவ்வாறு இணைந்தால்தான், தேர்தலில் வெற்றி பெற முடியும். இதை நான் திரும்பத் திரும்ப கூறிவருகிறேன்.
ஆனால், அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்குடன் பழனிசாமி தரப்பினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவேன் என்று பழனிசாமி கூறினார். ஆனால், அவர் தலைமைக்கு வந்த பின்னர், ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. பழனிசாமி அவராகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் அவருக்கு மரியாதை. இல்லையேல் அவர் அவமரியாதையை மட்டுமே சந்திப்பார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...