Published : 27 Mar 2025 11:43 PM
Last Updated : 27 Mar 2025 11:43 PM
திமுகவை தவிர, மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. ஒருமித்த கருத்துடைய கட்சிகளை எங்களுடன் சேர்த்துக் கொள்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, கோரிக்கை மனு அளித்திருக்கிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதி, எஸ்எஸ்ஏ கல்வித் திட்டத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருக்கிறேன்.
ஓபிஎஸ்-ஐ சேர்க்க மாட்டேன்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் மீண்டும் இணைந்து வருகின்றனர். நாங்களும் அவர்களை சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஓபிஎஸ்-ஐ கட்சியில் இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது, பிரிந்ததுதான். அதுமட்டுமல்ல, அவர் அதிமுகவை எதிரிகளிடம் அடமானம் வைத்ததை எங்களால் தாங்க முடியவில்லை. ரவுடிகளுடன் சென்று, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை உடைத்தாரோ, அப்போதே கட்சியில் இருப்பதற்கு ஓபிஎஸ் தகுதியில்லாதவர் ஆகிவிட்டார். அண்ணாமலை டெல்லி சென்றதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். டாஸ்மாக் ஊழலில் தொடர்புடைய நபர் யார் என்பதை நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) கண்டுபிடித்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதம் இருக்கிறது. 11 மாதங்களுக்கு முன்பு எந்த செய்தி வந்தாலும், அது நிலைக்காது. தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது, உங்களுக்கு முழுமையான தகவல் கொடுக்கப்படும்.
அதிமுகவைப் பொறுத்தவரை, திமுகவைத் தவிர மற்ற எந்த கட்சியும் எதிரி கிடையாது. தேர்தல் நேரத்தில், ஒருமித்தக் கருத்துடைய கட்சிகளை எங்களோடு சேர்த்துக்கொள்வோம். ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். போதைப் பொருட்கள் நடமாட்டத்துக்கு அளவே இல்லை. கஞ்சா போதையில் அரிவாளுடன் ரவுடிகள் வலம் வருகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் காவல் துறையைக் கண்டு பயப்படுவதே இல்லை. ஆனால், இவற்றைத் தடுத்து நிறுத்த அரசுக்கு திறன் கிடையாது. காவல் துறை அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது.
மதுபான ஊழல் குறித்து அண்ணாமலைதான் தெரிவித்தார். அமலாக்கத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, இதில் உள்ள உண்மையைக் கண்டறிந்து, யார் குற்றத்தில் ஈடுபட்டார்களோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...