Published : 27 Mar 2025 01:17 AM
Last Updated : 27 Mar 2025 01:17 AM
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 72 புதிய காவல் நிலையங்களும் 23 தீயணைப்பு நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கு சொந்தமாக சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட ரூ.2.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டும் பணி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மே மாதம் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிக்கப்படும். ஆவுடையார்கோவில் வட்டம், கரூர் காவல் நிலைய கட்டிடம் பழுதடைந்துள்ள நிலையில், புதிய நிலையம் கட்ட சாத்தியக்கூறு அறிக்கை, தோராய திட்ட மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காவல்துறை தலைமை இயக்குநரின் கருத்துபெற்ற பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்று 2021-லிருந்து தமிழக காவல்துறையில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அந்த 23 நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளன.
மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப எம்எல்ஏ்களின் கோரிக்கைகளை பரிசீலித்து சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, காவல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது சில அறிவிப்புகளும் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment