Published : 27 Mar 2025 12:54 AM
Last Updated : 27 Mar 2025 12:54 AM
ஆப்பிரிக்காவில் கடல் கொள்ளையர்களால் பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட தேனி பொறியாளரை மீட்க உதவும்படி ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த தனியார் கப்பல் கடந்த 17-ம் தேதி மத்திய ஆப்பிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அன்று மாலை சான்டோ அன்டோனியா பிரின்ஸ் என்ற பகுதியில் 40 கடல் மைல் தொலைவில் சென்றபோது கடல் கொள்ளையர்கள் அந்த கப்பலுக்குள் புகுந்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் கப்பலில் இருந்த 10 பேரை பணயக் கைதிகளாக பிடித்தனர். பின்னர், தாங்கள் வந்த கப்பலில் அவர்களை கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட 10 பேரில் 7 பேர் இந்தியர்கள். 3 பேர் ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள் . ஏழு இந்தியர்களில் ஒருவர் தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் லட்சுமண பிரதீப்(32) ஆவார். இவர் இக்கப்பலில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடத்தப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் இவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்து, லட்சுமண பிரதீப்பை மீட்க வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு இந்த தகவலை அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment