Published : 26 Mar 2025 05:56 AM
Last Updated : 26 Mar 2025 05:56 AM
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உடகபட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக்கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் வரும் ஏப்.9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment