Published : 25 Mar 2025 11:37 AM
Last Updated : 25 Mar 2025 11:37 AM
சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். இந்தப் பயணம் குறித்து அதிமுக தரப்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை.
அலுவலகத்தைப் பார்வையிடவா? அதிமுக சார்பில் கடந்த மாதம், புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். அந்த அலுவலகத்தைப் பார்வையிடவே எடப்பாடி பழனிசாமி செல்வதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் எவ்வித அறிவிப்புமின்றி எடப்பாடி பழனிசாமி திடீரென பயணம் மேற்கொள்வது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு (2026 மே) தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான கூட்டணிகள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக தலைவர்களுடன் சந்திப்பா? மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமையலாம் என்று கூறப்படுகிறது. இதனை இபிஎஸ் ஆமோதிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சேலத்தில் அண்மையில் இபிஎஸ் அளித்த பேட்டியொன்றில் பாஜகவுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, “எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதால் தேர்தல் நெருங்கும்போது நாங்களே அழைத்துச் சொல்லுவோம்.” என்று கூறியிருந்தார். இதனால் அதிமுக தேர்தலில் பாஜக கூட்டணியை ஏற்படுத்துவதில் திறந்த மனதோடே இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் பயணத்தின் போது பாஜக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது திரைமறைவு சந்திப்பாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. ஏற்கெனவே கோவையில் அமித் ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமித் ஷாவை வேலுமணி சந்தித்தது பரபரப்பானது நினைவுகூரத்தக்கது. எடப்பாடியை தொடர்ந்து இன்று மாலை எஸ்.பி.வேலுமணியும் டெல்லி செல்கிறார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் கோரிக்கை: இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், “சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி சென்றுள்ள அவர் அங்கு யாரை சந்திக்கிறார் என்ற செய்தியும் எங்களுக்கு வந்திருக்கிறது. டெல்லியில் சந்திப்பவர்களிடம் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறுபவர்கள் நாங்கள் அல்ல.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...