Published : 25 Mar 2025 06:36 AM
Last Updated : 25 Mar 2025 06:36 AM
முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் ரூ.375 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்வளத்துறை மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும்போது எந்த கட்சி அறிவித்த திட்டம் என்று நாங்கள் பார்ப்பது இல்லை. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டத்தை நாங்கள் அறிவித்தோம். ஆனால், தொடர்ந்து அதிமுக ஆட்சியில் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து அத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
கனிம வளங்கள் துறை: கனிம வளத்துறை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் கனிம வளத்துறை வாயிலாக ரூ.6,432 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. மேலும் 45 கல்குவாரிகளை ஏலம் விட்டதன் மூலமாக ரூ.125 கோடி அரசுக்கு வருவாய் வந்தது. சட்டத்துக்கு புறம்பாக கனிம வளங்களை வேறு மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல முடியாது. அதற்கு அனுமதி வாங்கி உரிய உரிமத் தொகையும், பசுமை நிதியும் செலுத்த வேண்டும். மாநில எல்லைகளில் 2 சோதனை சாவடிகள் செயல்படுகின்றன.
எனவே, அரசின் அனுமதி பெறாமல் சிறிய கல்லைக்கூட எடுத்துச்செல்ல முடியாது. சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்துச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் கனிமங்களை சட்டவிரோதமாக கொண்டுசென்ற 21,165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தை கட்டுப்படுத்தவும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.375 கோடியில் மேற்கொள்ளப்படும். 8 மாவட்டங்களில் 9 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி ரூ.185 கோடியில் மேற்கொள்ளப்படும். பாசன நிலங்களை எளிதில் சென்றடைய ஆறுகளின் குறுக்கே 8 மாவட்டங்களில், 17 இடங்களில் பாலங்கள் மற்றும் தரை பாலங்கள் ரூ.131 கோடியில் அமைக்கப்படும்.
பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதைத் தடுக்கவும், 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு, மறுகட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.723 கோடியில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருச்சி, வேலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் வெள்ளத் தணிப்புப் பணிகள் ரூ.131 கோடியே 28 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், செயற்கை முறையில் நிலத்தடிநீர் செறிவூட்டும் ஆழ்துளை கிணறுகள் ரூ.6 கோடியே 74 லட்சத்தில் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அணைக்கட்டு ரூ.130 கோடியில் புனரமைத்து சீரமைக்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர வெள்ளத் தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடியில் மேற்கொள்ளப்படும்.
மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும். விழுப்புரம் மாவட்டத்தில், புவிசார் பாரம்பரிய இடம் ஒன்று ரூ.5 கோடியில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment