Published : 25 Mar 2025 05:33 AM
Last Updated : 25 Mar 2025 05:33 AM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர் அமைச்சராக பதவியில் தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து 10 நாட்களில் பதிலளிக்க வேண்டுமென இறுதி அவகாசம் வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது என செந்தில் பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14 அன்று கைது செய்தனர். 471 நாட்களுக்குப் பிறகு கடந்தாண்டு செப்.26-ல் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த ஒரு நாள் இடைவெளியில் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமைச்சராக பதவி வகிப்பதால் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியம் அளிக்க பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு எதிரான மோசடி வழக்குகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையே நீர்த்துப்போய் உள்ளது. எனவே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த முறை விசாரித்த நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியில் தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பதை கேட்டு தெரிவிக்க அவரது தரப்புக்கு அறிவுறுத்தியிருந்தனர். இதுகுறித்து நேற்று மீண்டும் நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, அவர் அமைச்சராக பதவியேற்கக் கூடாது என எந்தவொரு குறிப்பிட்ட உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜாமீன் கிடைத்து விட்டது என்பதற்காக எந்தவொரு அட்வான்டேஜும் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தோம். அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன, அமைச்சராக பதவியி்ல் இல்லை என்றும் சாட்சிகளை கலைக்க மாட்டோம் என்றும் கூறித்தானே ஜாமீ்ன் பெற்றீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தருமாறு முகுல் ரோஹ்தகி கோரினார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை செந்தில் பாலாஜி தரப்பு முறையாக பி்ன்பற்றவில்லை. இப்படியே வழக்கை காலம் தாழ்த்தி உச்ச நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது. இது சரியான நடைமுறை கிடையாது. எனவே கால அவகாசம் எல்லாம் அளிக்க முடியாது என்றனர்.
அதற்கு வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, காலம் தாழ்த்துவதாக நீதிமன்றம் கருதினால் அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இறுதியாக அவகாசம் வழங்கினால் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்றார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் அவர் தொடர்ந்து அமைச்சராக பதவியில் நீடிக்கப் போகிறாரா, இல்லையா என்பது குறித்து பதிலளிக்க இறுதியாக 10 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். அதன்பிறகு எந்த அவகாசமும் வழங்கப்படாது எனக்கூறி செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் ஏப்.9-க்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...