Published : 25 Mar 2025 04:27 AM
Last Updated : 25 Mar 2025 04:27 AM
மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் வம்பாமேடு பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விஷச் சாராயம் அருந்தி எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 14 பேரும், அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா, மதுவிலக்கு டிஎஸ்பி பழனி, மற்றும் மரக்காணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், எஸ்.ஐ.க்கள் தீபன், சீனிவாசன் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா, எஸ்.ஐ. சிவகுருநாதன், மரக்காணம் போலீஸ் நிலைய ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், விஷ சாராய விற்பனையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தவறியதாக விஏஓ சதாசிவம், உதவியாளர் மாரிமுத்து ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விஷ சாராய வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி மரக்காணம் காவல் நிலையத்தினர் ஒப்படைத்தனர். விசாரணை அதிகாரியான சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி தலைமையிலான போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
மரக்காணம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த விஷ சாராய வழக்கில் விழுப்புரம் மாவட்டத்தில் 11 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேரும் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையின் அடிப்படையில் அரகண்டநல்லூர் தலைமைக் காவலர் செந்தில்குமார், ரோஷனை காவல் நிலைய தலைமைக் காவலர் வேலு, முதல்நிலைக் காவலர்கள் விக்கிரவாண்டி குணசேகரன், சத்தியமங்கலம் பிரபு, கஞ்சனூர் முத்துகுமார் ஆகியோருக்கு கட்டாய ஓய்வளித்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர்களுக்கு இவ்வழக்கின் ஆரம்பத்தில் தற்காலிக பணி நீக்கம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஏதும் வழங்கப்படவில்லை. மரக்காணம் போலீஸார் தொடக்கத்தில் இவ்வழக்கில் இவர்களைச் சேர்க்கவில்லை. அதன்பின் சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கை எடுத்து நடத்தியபோது இவர்கள் 5 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கை அடிப்படையில் 5 பேரையும் கட்டாய ஓய்வு அளித்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளனார்.
மதுபான ஆலைகளில் எவ்வளவு ரசாயனம் கலக்கப்படுகிறது என்பதை வருவாய்த் துறையில் கலால் தாசில்தார் கண்காணிக்க வேண்டும்.
ஒரு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உயர் அதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டியது அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களின் கடமை.
ஆனால் அவர்கள் மீது கட்டாய ஓய்வு போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினர் மீது மட்டும் எடுத்து இருப்பது ஒருதலைப்பட்சமானது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment