Published : 24 Mar 2025 01:56 PM
Last Updated : 24 Mar 2025 01:56 PM
சென்னை: உலக வங்கி நிதியுதவியுடன் நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 அணைகளை ரூ.177 கோடி செலவில் சீரமைக்க மின்வாரியம் தீர்மானித்துள்ளது.
தமிழக மின்வாரியத்துக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் மின்வாரியத்துக்கு 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் அருகில் உள்ள 74 சிறிய அணைகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.
மேலும், இந்த அணைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே, உலக வங்கி நிதியுதவியுடன் அணைகளை சீரமைக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அணைகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.167 கோடியில் 20 அணைகளில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, கரைகளை பலப்படுத்துதல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் கடந்த 2015 முதல் 20-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
இத்திட்டத்தில், 2-ம் கட்ட பணிகள் ரூ.277 கோடி செலவில் 27 அணைகளில் நடக்கிறது. இந்தப் பணிகள் 2021-ம் ஆண்டு தொடங்கி வரும் 2027-ம் ஆண்டு முடிவடைய உள்ளது. இதுவரை 10 அணைகளில் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் 6 அணைகளில் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 3-ம் கட்டமாக ரூ.177 கோடி செலவில் நீலகிரியில் உள்ள குந்தா பாலம், பில்லூர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ஆகிய அணைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, அடுத்தமாதம் உலக வங்கியுடன் மின்வாரியம் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது. சீரமைப்பு பணிகளை இந்த ஆண்டு தொடங்கி வரும் 2031-ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment