Published : 23 Mar 2025 06:37 PM
Last Updated : 23 Mar 2025 06:37 PM
திண்டுக்கல்: கோடை சீசன் துவங்கியதன் அறிகுறியாக கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து ரம்மியமான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தின் கோடைவாசஸ்தலங்களில் கொடைக்கானல் மலைகளின் இளவரசியாக திகழ்கிறது. காரணம் இங்கு ஆண்டுதோறும் நிலவும் சீதோஷ்ணநிலை தான். கோடை காலம் துவக்கத்திலேயே தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கத்தால் செடிகள் கருகி காட்டுத்தீ ஏற்பட்டது. துவக்கத்திலேயே வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தீ வனப்பகுதியில் பரவாமல் கட்டுப்படுத்தினர். அந்த அளவிற்கு மலைப்பகுதியிலேயே வெயிலின் தாக்கம் இருந்தது.
கோடை சீசன் துவங்குவதன் அறிகுறியாக கோடைமழையை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக பகலில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்துவருகிறது. வெள்ளி, சனிக்கிழமைகளில் கனமழை பெய்தநிலையில் மலைப்பகுதி குளிர்ந்து வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. தொடர் மழையால் வெள்ளிநீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை நீர்வீழ்ச்சி, எலிவால் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதை சுற்றுலாபயணிகள் ரசித்துசெல்கின்றனர்.
பகலில் மோயர் சதுக்கம், கோக்கர்ஸ் வாக் பகுதிகளில் மேகக்கூட்டங்கள் இறங்கி வந்து சுற்றுலாப் பயணிகளை தழுவிச்செல்வது சுற்றுலா வந்தவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் மழையில் நனைந்தபடியே ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகுசவாரி செய்கின்றனர். பிரையண்ட் பூங்காவில் மே மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் அடுத்த மாத தொடக்கத்தில் பூத்துக்குலுங்க உள்ளன.
கொடைக்கானலில் இன்று பகலில் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. மாலையில் சாரல் மழை பெய்தது. காற்றின் ஈரப்பதம் 73 சதவீதம் இருந்ததால் பகலிலேயே குளிர் உணரப்பட்டது. இரவில் குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. நேற்று மாலை கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாரல் மழையில் நனைந்து கொண்டும் சிலர் படகு சவாரி செய்தனர்.
தரைப்பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், கோடை சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கொடைக்கானலுக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...