Published : 23 Mar 2025 03:46 PM
Last Updated : 23 Mar 2025 03:46 PM
சென்னை: ‘வடசென்னை 3-வது அனல் மின் நிலையத்தில் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி வரும் மே மாதம் தொடங்கப்படும்’ என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் ரூ.10,158 கோடி செலவில் 800 மெகா வாட் திறனில் வடசென்னை-3 அனல் மின் நிலையத்தை மின்வாரியம் அமைத்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் முடிந்து 2024 மார்ச் 7ம் தேதி சோதனை ரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது.
சோதனை மின்னுற்பத்தி தொடங்கிய நிலையில், முழு திறனில் 72 மணி நேரம் தொடர்ந்து மின்னுற்பத்தி செய்யப்பட வேண்டும். அதன்பின், வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்படும். வடசென்னை 3-வது மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி தொடங்கிய நிலையில், தினமும் சராசரியாக 500 முதல் 600 மெகா வாட் மின்னுற்பத்தி செய்த நிலையில், ஜுன் 27ம் தேதி முழு திறனில் மின்னுற்பத்தி செய்யப்பட்டது.
பின்னர், மின்னுற்பத்தி குறைக்கப்பட்டது. மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் இன்னும் வணிக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "வடசென்னை 3-வது அனல் மின் நிலையத்தில் மின்னுற்பத்தி தொடங்கிய பின், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை சரி செய்ய வேண்டி உள்ளதால், வணிக மின்னுற்பத்தி தொடங்க தாமதமாகிறது. எனவே, இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் மே மாதம் வணிக மின்னுற்பத்தி தொடங்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment