Published : 23 Mar 2025 09:43 AM
Last Updated : 23 Mar 2025 09:43 AM
கோடை விடுமுறையின்போது, விரைவு ரயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோடைகாலம் தொடங்கியுள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறை விட்ட பிறகு பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான ரயில்களில் குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை கூடி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, தேவை அதிகம் உள்ள விரைவு ரயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்த பிறகு, கோடை விடுமுறை தொடங்கும்போது பொதுமக்கள் சொந்த ஊர்கள், சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் செல்வார்கள். எனவே, அடுத்த மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கவும், வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கவும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் படிப்படியாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில் 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்களில் முன்பதிவு, காத்திருப்போர் எண்ணிக்கை பட்டியலை தெற்கு ரயில்வே தயாரித்து வருகிறது. இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உட்பட பல்வேறு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment