Published : 23 Mar 2025 06:55 AM
Last Updated : 23 Mar 2025 06:55 AM

நியாயமான தொகுதி மறுவரையறை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: தொகுதி மறு​வரையறை விவ​காரத்​தில், எந்தச் சூழலிலும் நமது பிர​தி​நி​தித்​து​வம் குறைய கூடாது, குறைய​விட கூடாது என்ற உறு​தி​யோடு போராடு​வோம். நியாய​மான தொகுதி மறு​வரையறை கிடைக்​கும் வரை நாம் இணைந்து ஒற்​றுமை உணர்​வோடு போராடு​வோம் என்று முதல்​வர் ஸ்டா​லின் உறு​திபட தெரி​வித்​தார்.

மக்​களவை தொகுதி மறு​வரையறைக்கு எதி​ராக அமைக்​கப்​பட்​டுள்ள கூட்டு நடவடிக்கை குழு​வின் முதல் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொடக்க உரை நிகழ்த்தி முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: இந்​திய அரசி​யல் வரலாற்​றில் ஒரு மாநிலத்​தில் இருக்​கிற, ஆட்சி செய்​கிற ஒரு கட்​சி​யின் அழைப்பை ஏற்று இத்​தனை இயக்​கங்​கள், கட்​சிகள் வந்​திருப்​பது இக்​கூட்​டத்​தின் மாபெரும் சிறப்​பு. நாட்​டில் உள்ள ஒவ்​வொரு மாநில​மும், ஒவ்​வொரு வகை​யில் தனித்​தன்மை கொண்​டது. மாநிலங்​கள் சுயாட்சி தன்​மை​யுடன் செயல்​பட்​டால்​தான் உண்​மை​யான கூட்​டாட்சி உரு​வாக முடி​யும். சிறந்த வளர்ச்​சியை அடைய முடி​யும். அனைத்து தரப்பு மக்​களும் போராடிய​தால்​தான், நாட்​டுக்கு விடு​தலை கிடைத்​தது.

இதை உணர்ந்​து​தான், அரசி​யலமைப்பு சட்​டத்தை வகுத்த மேதைகள், இந்​தி​யாவை கூட்​டாட்சி கொண்ட ஒன்​றிய​மாக கட்​டமைத்​தனர். பல்​வேறு கால​கட்​டங்​களில் இந்த கூட்​டாட்சி தன்​மைக்கு சோதனை வந்​தா​லும், அதை ஜனநாயக அமைப்​பு​கள், இயக்​கங்​கள் தடுத்து வந்​துள்​ளன. அத்​தகைய சோதனை, ஆபத்து இப்​போதும் வந்​துள்​ளது. அதை உணர்ந்​து​தான் நாம் அனை​வரும் கூடி​யிருக்​கிறோம்.

இங்கு இருக்​கும் ஒவ்​வொரு மாநில​மும், மக்​கள்​தொகை கட்​டுப்​பாட்​டின் மூலம் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றத்தை காட்​டி​யுள்​ளன. இத்​தகைய மாநிலங்​களை தண்​டிப்​ப​தாக மத்​திய அரசின் தொகுதி மறு​வரையறை நடவடிக்கை இருக்​கப் போகிறது. அடுத்து நடை​பெற உள்ள மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பின் அடிப்​படை​யில் மக்​களவை தொகு​தி​களை மறு​வரையறை செய்​வது, நம்மை போன்ற மாநிலங்​களை வெகு​வாக பாதிக்​கும்.

மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்​கை​யில் நமது பிர​தி​நி​தித்​து​வத்தை அதி​கம் இழக்க நேரிடும். எனவே​தான் இதை கடுமையாக, ஆணித்​தர​மாக எதிர்க்க வேண்​டிய நிலை​யில் இருக்கிறோம். தற்​போதைய மக்​கள்​தொகை அடிப்​படை​யில் தொகுதி மறு​வரையறை செய்​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என்​ப​தில் நாம் அனை​வரும் உறு​தி​யாக இருக்க வேண்​டும்.

மணிப்​பூர் மாநிலம் 2 ஆண்​டு​களாக பற்றி எரி​கிறது. ஆனால், நீதிக்​கான அவர்​களது குரல்​கள் புறக்​கணிக்​கப்​படு​கின்​றன. ஏனென்​றால் நாட்​டின் கவனத்தை ஈர்க்க அவர்​களுக்கு அரசி​யல் வலிமை இல்​லை. எனவே, மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்கை அல்​லது நமது பிர​தி​நி​தித்​து​வம் குறைவது என்​ப​தை, நமது அரசி​யல் வலிமையை குறைப்பதாகத்​தான் பார்க்க வேண்​டும். தொகுதி எண்​ணிக்கை அல்​லது நமது மாநில பிர​தி​நி​தித்​து​வத்தை குறைக்க அனு​ம​தித்​தால், நம் சொந்த நாட்​டில் நாம் அரசி​யல் அதி​காரம் இழந்த குடிமக்​களாக மாறும் அபா​யம் உள்​ளது.

இது வெறும் எண்​ணிக்கை பற்​றியது மட்​டுமல்ல. இது நமது அதி​காரம், உரிமை​கள், எதிர்​காலம் நலன்​கள் பற்​றியது. பிரதிநிதித்​து​வம் குறைந்​தால், நமது மாநிலங்​கள் நமக்கு தேவை​யான நிதியை பெறு​வதற்​கு​கூட போராட வேண்​டிவரும். எப்​போதும் மாநிலங்​கள், மாநில உரிமை​களை பறிக்​கும் கட்​சி​யாக பாஜக இருந்​துள்​ளது. இதை எந்த மாநில​மும் அனு​ம​திக்க கூடாது. இந்த அச்​சுறுத்​தலை உணர்ந்​து, இது​வரை இல்​லாத ஒற்​றுமை​யுடன் தமிழகம் செயல்​பட்டு வரு​கிறது. இதே​போன்ற ஒற்​றுமையை இந்த அரங்​கில் உள்ள அனைத்து மாநிலங்​களும் காட்ட வேண்​டும்.

நமது இந்த போராட்​டம் தொகுதி மறு​வரையறைக்கு எதி​ரானது அல்ல. தொகுதி மறு​வரையறை நியாய​மாக நடை​பெற வேண்​டும் என்​ப​தையே இந்த போராட்​டம் வலி​யுறுத்​துகிறது. நம்உரிமையை நிலை​நாட்ட தொடர் நடவடிக்கை மேற்​கொள்​வது மிக அவசி​யம். மத்​திய அரசை வலி​யுறுத்​தும் அதே நேரத்​தில், இதுகுறித்து மக்​களிடம் விழிப்​புணர்​வும் ஏற்​படுத்த வேண்​டும். ஒற்​றுமை உணர்​வோடு அனை​வரும் ஒன்​று​பட்டு போராடி​னால்தான் வெற்றி பெற முடி​யும். எந்தசூழலிலும் நமது பிர​தி​நி​தித்​து​வம் குறையக் கூடாது, குறைய​விடகூடாது என்ற உறு​தி​யோடு போராடுவோம். நியாய​மான தொகுதி மறு​வரையறை கிடைக்​கும் வரை நாம் இணைந்து போராடு​வோம். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x