Published : 22 Mar 2025 04:34 PM
Last Updated : 22 Mar 2025 04:34 PM

“பேராபத்தை தடுக்கும் முயற்சி!” - தொகுதி மறுவரையறை ஜேஏசி கூட்டத்துக்கு முத்தரசன் பாராட்டு

சென்னை: “நாடு எதிர் கொள்ளும் பேராபத்தை முன் உணர்ந்து, அதனை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்” என தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கூட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஒன்றிய அரசின் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உரிமைகளை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.03.2025-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டறிந்தார். அந்தக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தொகுதிகள் மறுசீரமைப்பு நியாயமான முறையில் அமைய வேண்டும் என்ற முறையில் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதல்வர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இன்று 22.03.2025 நடத்தியுள்ள கூட்டம் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலங்களின் உரிமைகளை நிலை நாட்டுவதுடன், குடியரசு அமைப்பின் அச்சாக விளங்கும் கூட்டாட்சி நெறிமுறைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என்பதை எதிர்கால வரலாறு உறுதி செய்யும்.

வரும் முன் உரைப்பது அமைச்சு என்ற இலக்கணத்துக்கு ஏற்ப, நாடு எதிர் கொள்ளும் பேராபத்தை முன் உணர்ந்து, அதனை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வதுடன் முதல்வரின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்ட கேரளம், தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதல்வர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x