Published : 21 Mar 2025 09:52 PM
Last Updated : 21 Mar 2025 09:52 PM
சென்னை: கர்ப்பிணியான நீதிமன்ற பெண் ஊழியருக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்தது சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், பேறுகால விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த முன்சீப் நீதிமன்ற நீதிபதி, அந்த பெண் ஊழியர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரித்துள்ளதாகக் கூறி அவருக்கு விடுப்பு வழங்க மறுத்து விட்டார். அதை எதிர்த்து அந்த பெண் ஊழியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், எனது கணவர் கடந்த 2020-ம் ஆண்டு இறந்து விட்டார்.
அதன்பின்னர் பாரதி என்பவரும் நானும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். இதில் நான் கர்ப்பமடைந்தேன். இந்நிலையில், அவர் என்னை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் போலீஸில் புகார் அளித்தேன். அதன்பிறகு கடந்த 2024-ல் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு பேறுகால விடுப்பு வழங்க முன்சீப் நீதிபதியும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் மறுத்து விட்டனர், எனக்கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘கர்ப்பம் தரித்த பெண் ஊழியருக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்தது சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல. பேறுகால விடுப்பு வழங்க அவரது பின்புலத்தை ஆராய வேண்டிய அவசியமும் கிடையாது. அதேபோல அவர் பதிவு திருமணமும் செய்து சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. அவருக்கு பேறுகால விடுப்பு வழங்காதது மனித உரிமை மீறல் என்பதால் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டுத்தொகையை சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment