Published : 21 Mar 2025 09:11 PM
Last Updated : 21 Mar 2025 09:11 PM
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1,000 கிலோ கெட்டுப்போன தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நீர், இளநீர், தர்பூசணி விற்பனையும் அதிகளவில் இருந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் தர்பூசணி, இளநி கடைகளில் குவிகின்றனர். இவற்றை பயன்படுத்தி அதிகமான கடைகளில் ரசாயணம் கலந்து பழுக்க வைத்த தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அதை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சாலையோரம் விற்பனை செய்யப்படும் தர்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெட்டுப்போன நிலையில் இருந்த 1,000 கிலோ தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பழங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில், “இவ்வாறு ரசாயனம் கலந்த பழங்கள், கெட்டுப்போன பழங்களை வியாபாரிகள் யாரும் விற்பனை செய்ய வேண்டாம். அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment