Published : 21 Mar 2025 01:18 AM
Last Updated : 21 Mar 2025 01:18 AM
தமிழகத்தில் 2,329 கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.1,087.33 கோடிக்கு நிர்வாக ஒப்புதலுடன், வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெறும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நோக்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், வரும் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 2025-26-ம் ஆண்டில் 2,338 கிராம ஊராட்சிகளில் ரூ.1,091.38 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் அனுப்பிய கடிதத்தில், முந்தைய ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 கிராமங்கள், புதுக்கோட்டை, நாமக்கல்லில் தலா ஒரு கிராமம் என 9 கிராமங்கள் தவிர்த்து 2,329 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,087.33 கோடி ஒதுக்கும்படி கோரினார். இதை ஏற்ற தமிழக அரசு, நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் திட்டத்தின்கீழ் பெற்ற அனுபவம் அடிப்படையில் குளங்கள், ஊரணிகள் புனரமைப்பு, பொது பயன்பாட்டுக் கட்டிடங்கள், சமத்துவ சுடுகாடு, இடுகாடுகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள், தெருக்கள், வீதிகள் மேம்பாடு, தெருவிளக்குகள், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகள் ஆகிய 6 பிரிவுகளுக்கு இடையில் ஒதுக்கீட்டை வட்டார அளவில், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும்.
இந்த ஒதுக்கீட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment