Published : 21 Mar 2025 01:07 AM
Last Updated : 21 Mar 2025 01:07 AM

கடன் வாங்கும் தகுதி இருக்கிறது என்பதற்காக தேவையின்றி கடன் வாங்க மாட்டோம்: தங்கம் தென்னரசு விளக்கம்

கடன் வாங்கும் தகுதி இருக்கிறது என்பதற்காக தேவையில்லாமல் கடன் வாங்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினருக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம் வருமாறு:

உறுப்பினர் பி.தங்கமணி (அதிமுக): திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளீர்கள். மின்வாரியத்துக்கு ரூ.42 ஆயிரம் கோடி மானியமாக கொடுத்துள்ளீர்கள். கடன்தொகைக்கு ரூ.70 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறோம்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: கடன் வாங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான் கடன் வாங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 சதவீதம் கடன் வாங்கலாம் என்பதற்காக தேவையில்லாமல் கடன் வாங்கும் நிலைக்கு செல்ல மாட்டோம். கடனை திருப்பிச் செலுத்தும் திறன் இருக்கிறது.

உறுப்பினர் தங்கமணி: தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏறத்தாழ 92 லட்சம் பேர் பயன்பெற்று வருகி்ன்றனர். அவர்களில் சுமார் 78 லட்சம் பேர் பெண்கள். 100 நாள் திட்ட பயனாளிகளுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கு ஆகும் ரூ.4 ஆயிரம் கோடியை முதலில் தமிழக அரசே செலுத்த வேண்டும். அதன்பிறகு மத்திய அரசின் நிதி கிடைத்தவுடன் அதை எடுத்துக்கொள்ளலாம்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிசாமி: 100 நாள் வேலை திட்டம் என்பது மத்திய அரசு திட்டம். அதற்கான நிதி முழுவதையும் மத்திய அரசுதான் வழங்க வேண்டும். அந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மத்திய அரசிடமிருந்து ரூ.3,900 கோடி வரவேண்டியுள்ளது. மத்திய அரசு தமிழகம் உள்பட பல் மாநிலங்களில் மனித சக்தி நாட்களை குறைத்துள்ளது. கூட்டணியில் இருப்பதால் மத்தியில் உள்ள பாஜக அரசிடம் பேசி 100 நாள் திட்ட நிதியை கொடுக்கச் சொல்லுங்கள்.

உறுப்பினர் தங்கமணி: மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கொடுக்கிறீர்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் 2 அல்லது 3 நாளில் இந்த பணத்தை அவர்களை சம்பாதித்துக் கொள்வார்கள். வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா: தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் பெண் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும் மாநிலம் தமிழகம்தான். 41 சதவீத பெண் தொழிலாளர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: வரும் நிதி ஆண்டில் ஒரு லட்சம் பெண்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.225 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x