Published : 21 Mar 2025 12:40 AM
Last Updated : 21 Mar 2025 12:40 AM
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த வெம்பாக்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு 24 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் வசித்தவர் வினோத்குமார்(49). எல்லை பாதுகாப்பு படை வீரர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்பூரில் 62-வது படை தளத்தில் பணியாற்றினார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வீர மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல், விமானம் மூலம் சென்னைக்கும், பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு கூடுதல் எஸ்.பி., சீவல பாண்டியன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ராணுவ வீரர்கள் அணிவகுப்புடன், அவரது வீட்டில் இருந்து மயானத்துக்கு வினோத்குமார் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, 24 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அரசு மரியாதையுடன், இறுதி சடங்கு நடைபெற்றது. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment