Published : 20 Mar 2025 04:21 AM
Last Updated : 20 Mar 2025 04:21 AM
சென்னை: கூடுதலாக கடன் தொகையை வசூலித்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்ததற்காக கோடக் மஹிந்திரா வங்கி ரூ.1.50 லட்சம் அபராதமும், அதன் மேலாளருக்கு 3 மாத சிறை தண்டனையும் விதித்து எழும்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சிஐடி நகரை சேர்ந்தவர் ஆர்.செல்வராஜ். இவர், கோடக் மஹிந்திரா வங்கியில் கடந்த 2006-ம் ஆண்டு ரூ.1.50 கோடி கடன் வாங்கினார். இந்த கடனை முன்கூட்டியே முடிப்பதற்கு முன்வந்தபோது, வங்கி அதிகாரிகள் கூறியதன்பேரில் ரூ.1.70 கோடியை வரைவோலை மூலம் கடந்த 2007 மார்ச் 28-ம் தேதி செலுத்தினார். ஆனால், நிலுவையில் உள்ள கடன் தொகையைவிட வங்கி நிர்வாகம் கூடுதலாக வசூல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, வங்கி நிர்வாகத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து 2 வழக்குகளை செல்வராஜ் தொடர்ந்தார்.
இதில் ஒரு வழக்கில், ‘கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கவில்லை’ என்று வங்கியின் சட்ட பிரிவு மேலாளர் கார்த்திகேயன் பதில் மனு தாக்கல் செய்தார். மற்றொரு வழக்கில், ‘ரூ.1.70 கோடி பணத்தில் கடனுக்கு வரவு வைத்ததுபோக ரூ.14.30 லட்சத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று வங்கியின் சாரல் ஆட்டோ கடன் பிரிவு துணை தலைவர் எழிலரசன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இது முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவின்படி, வங்கியின் துணை தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற துணை பதிவாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி என்.கோதண்டராஜ் விசாரித்தார். தெரிந்தே நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்ததற்காக கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாகத்துக்கு ரூ.1.50 லட்சம் அபராதமும், சட்ட பிரிவு மேலாளர் கார்த்திகேயனுக்கு 3 மாத சிறை தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment