Published : 15 Mar 2025 03:53 PM
Last Updated : 15 Mar 2025 03:53 PM

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: மார்ச் 18-ல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். வரும் 18-ம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிகிறது.

கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்... - வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டி வரும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்மையில் மக்களவையி பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்விகளை எழுப்பியுள்ளன” என்று கூறியிருந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. பல்வேறு மாநிலங்களிலும் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும், வாக்காளர்கள் பெயர்கள் சேர்ப்பு, நீக்கத்திலும் குளறுபடி இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.

இத்தகைய குற்றச்சாட்டுகளை ஒட்டி, “இந்திய தேர்தல் ஆணையத்தின் பாரம்பரியத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் குற்றச்சாட்டுகள் முன்வருகின்றன. அடுத்த மூன்று மாதங்களில் இந்தச் சிக்கலுக்கு தீர்வு எட்டப்படும்” என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில்தான் தலைமைத் தேர்தல் ஆணையர், உள்துறை செயலர், சட்டப்பேரவை செயலர் மற்றும் யுஐடிஏஐ அமைப்பின் சிஇஓ ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. இதனடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1950 பிரிவு 23-ன் படி வாக்காளர் பதிவு அலுவலகம் வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை பெற வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்படவில்லை. சிலர் தாமாகவே முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைத்தும் வருகின்றனர்.

இருப்பினும், அவ்வாறாக வாக்காளர் அடையாள எண்ணுடன் தங்களின் ஆதார் விவரத்தை இணைக்காதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்பதையும் அரசு தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x