Published : 14 Mar 2025 04:44 PM
Last Updated : 14 Mar 2025 04:44 PM
சென்னை: வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி பணம் பெற்ற வழக்கில் எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ1.55 கோடி பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
மேலும், இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹைதர் அலி் என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைவரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி வசூலில் ஈடுபட்டதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment