Published : 11 Mar 2025 06:15 AM
Last Updated : 11 Mar 2025 06:15 AM
சென்னை: கோடை காலத்தை ஒட்டி ஆவின் மோர், ஐஸ் கிரீம், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினசரி 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பல வகைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர மோர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு கோடை காலத்தை ஒட்டி மோர், ஐஸ் கிரீம், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஸ் கிரீம், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பாலகங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம், மோர் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, அம்பத்தூர் உட்பட பல்வேறு தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக மோர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட ஆவின் பொருட்களை மொத்தமாக விநியோகம் செய்ய பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...