Published : 11 Mar 2025 12:02 AM
Last Updated : 11 Mar 2025 12:02 AM

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றிணைப்பு குறித்து இபிஎஸ் பேச்சு வரவேற்கத்தக்கது: சீமான் கருத்து

திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது வரவேற்கத்தக்கது என சீமான் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கையில் அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டு சம கல்வி என்று சொல்வதே மோசடி. நகர்ப்புறங்களில் இருக்கும் வசதிகள் கிராமப்புற பள்ளிகளில் இருக்கிறதா? சம கல்வி என்பது இருக்கிறதா? வரி ஒன்றாக இருக்கிறது ஆனால், வாழ்க்கை தரம் ஒன்றாக இருக்கிறதா? முதல் தர ஆசிரியர்களை நகர்ப்புறங்களில் வைத்துக்கொண்டு, மூன்றாம் தர ஆசிரியர்களை கிராமங்களில் நியமிக்கின்றனர்.

திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது வரவேற்கத்தக்கது. இதில் முதன்மையான பங்கு என்னுடையதாக இருக்கும். ஆனால், நான் மட்டும் தனியாக இருப்பேன். கூட்டணியில் இல்லாமல் வெல்ல முடியும். கொள்கை இல்லாமல் கூட்டணி மட்டும் வென்று விடுமா?

தொகுதி மறு சீரமைப்பை நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறேன். 30 கோடி மக்கள் தொகைக்கு 543 என்ற எண்ணிக்கையில் எம்.பி.க்களை வைத்து இருந்தார்கள். 6 சட்டப்பேரவைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை 3 சட்டப்பேரவைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என கொண்டு வர வேண்டும். இதை நாங்கள் முன்மொழிகிறோம்.

ஒருநாள் தொப்பி போட்டு வேடம் போடும் இஸ்லாமியர் நான் இல்லை. தம்பி விஜய் இதை விரும்புகிறார். மீனவர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுவது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x