Published : 09 Mar 2025 12:19 PM
Last Updated : 09 Mar 2025 12:19 PM
கடற்கரை - எழும்பூர் இடையே புதியதாக அமைக்கப்பட்டுள்ள 4-வது ரயில் பாதையில் ஆய்வு நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று அதிகாலை முதல் மாலை வரை மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து, ஆய்வு மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கடற்கரை - தாம்பரம் இடையே 9-ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிடத்துக்கு ஒரு பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. மாலை 4.10 மணிக்கு பிறகு மின்சார ரயில் சேவை சீராகும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்: ரயில் சேவை ரத்து செய்யப்படுவதை அடுத்து, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி, தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment