Published : 09 Mar 2025 09:51 AM
Last Updated : 09 Mar 2025 09:51 AM
ஒசூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஆட்சேபனை தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டோரை அம்மாநில போலீஸார் கைது செய்தனர்.
கன்னட சலுவாலி வட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்டோர் நேற்று கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி பகுதிக்குள் அவர்கள் நுழைய முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த கர்நாடக மாநிலம் ஆனேக்கல் போலீஸார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, அழைத்துச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து பந்தில் ஈடுபட உள்ளோம். தமிழக அரசு மேகேதாட்டு அணை கட்ட ஆட்சேபனை இல்லை என ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் முதல்கட்ட போராட்டமாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களை ஓட விட மாட்டோம். மும்மொழி கொள்கைக்கு எதிராகத் தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு என்பதை நாங்கள் கண்டிக்கிறோம். தமிழகத்தில் நடக்கும் இந்தி போராட்டத்தை விட, கர்நாடக மாநிலத்தில் இந்தி மொழிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment