Published : 06 Mar 2025 09:33 AM
Last Updated : 06 Mar 2025 09:33 AM
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சித் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாகவே இன்றைக்கும் பார்க்கப்படுகின்றன. அதில் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை எம்ஜிஆர் போட்டியிட்ட அருப்புக்கோட்டை, ஆண்டிபட்டி, மதுரை மேற்கு தொகுதிகளில் வசிக்கும் மக்கள் “இது எம்ஜிஆர் போட்டியிட்ட தொகுதி” என்று சொல்லிக் கொள்வதை இன்றைக்கும் பெருமையாக நினைக்கிறார்கள்.
இந்த மூன்று தொகுதிகளில் அருப்புக்கோட்டையையும் ஆண்டிபட்டியையும் இப்போது திமுக தன்வசமாக்கி வைத்திருக்கிறது. ஆனால், மதுரை மேற்கில் திமுக-வால் நீண்ட காலமாக கால்பதிக்க முடியவில்லை. 1977 முதல் இதுவரைக்கும் 7 முறை இந்தத் தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறது அதிமுக. தொடர்ச்சியாக கடந்த மூன்று தேர்தல்களாக இங்கு வாகை சூடி வருகிறார் செல்லூர் ராஜூ. திமுக இங்கு 3 முறை மட்டுமே வென்றுள்ளது. சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, எம்ஜிஆர், பொன்.முத்துராமலிங்கம், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், செல்லூர் ராஜு ஆகியோர் இங்கு நின்று வென்ற முக்கிய தலைவர்கள்.
2021 தேர்தலில், மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தி, சோழவந்தான் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. மதுரை மேற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலூர் தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது.
மதுரை மேற்கில் அதிமுக தொடர்ந்து வெற்றிபெறுவதற்கு அது எம்ஜிஆர் களம்கண்ட தொகுதி என்ற சென்டிமென்டும் முக்கிய காரணி. 2026-ல் இந்த சென்டிமென்டை உடைத்து மதுரை மேற்கில் உதய சூரியனை உதிக்க வைக்கும் பொறுப்பை அமைச்சர் மூர்த்தி வசம் ஒப்படைத்திருக்கிறது திமுக தலைமை. ஆனால், அது முடியவே முடியாது என்கிறார் செல்லூர் ராஜூ.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை திமுக-வினர், “200 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கும் தலைவர் ஸ்டாலின், அதற்கேற்ப நுணுக்கமாக சிந்தித்து செயல்பட்டு வருகிறார். அண்மையில் ஒரு சில மாவட்டங்களுக்கு செயலாளர்களை மாற்றியதுகூட அப்படித்தான்.
மதுரை மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களின் எல்லையை மாற்றி அமைத்திருக்கிறார் ஸ்டாலின். மதுரை மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக கோ.தளபதி இருந்தார். தற்போதைய மாற்றத்தில் அவரிடமிருந்து மதுரை மேற்கு தொகுதியை பிரித்து அதை மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் மூர்த்தி வசம் கொடுத்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலூர் தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை வடக்கு மாவட்டத்துக்கு மூர்த்தி செயலாளராக இருந்தார். இப்போது கூடுதலாக மதுரை தெற்கு தொகுதியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. மூர்த்தியிடம் எந்த வேலையைக் கொடுத்தாலும் அதை நேர்த்தியாகச் செய்வார் என்பது தலைமைக்கு தெரியும்.
அந்த வகையில் தான், எம்ஜிஆர் தொகுதி என்ற சென்டிமென்டை உடைத்து இம்முறை அங்கு திமுக-வை ஜெயிக்க வைக்கும் பொறுப்பை மூர்த்தி வசம் ஒப்படைத்திருக்கிறது தலைமை. கடந்த முறை சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கைவிட்டுப் போன மதுரை மேற்கை இம்முறை எப்பாடு பட்டாவது கைப்பற்றிக் காட்டுவார் மூர்த்தி” என்றனர்.
எம்ஜிஆர் சென்டிமென்டை திமுக-வால் உடைக்க முடியுமா என்று மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வி.கே.சாமியிடம் கேட்டதற்கு, “எம்ஜிஆர் போட்டியிட்ட மதுரை மேற்கு தொகுதியில் மதிச்சியம், ஆழ்வார்புரம், செல்லூர், தல்லாகுளம், ஆத்திகுளம், ஆரப்பாளையம் பகுதிகள் இருந்தன. ஆனால், இவை எல்லாம் தற்போது மதுரை மத்தி, தெற்கு, வடக்கு தொகுதிகளுக்குள் போய்விட்டன.
இப்போதுள்ள மேற்கு தொகுதிக்குள் பரவை, விளாங்குடி, துவரிமான், கீழமாத்தூர், மேலக்கால் உள்ளிட்ட கிராமப்புறங்களே இருக்கின்றன. இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் அதிமுக ஆதரவு மனப்பான்மையில் இருப்பவர்கள். அதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே முக்குலத்தோர் அல்லாத தளபதியை ஒதுக்கிவிட்டு முக்குலத்தோரான மூர்த்தியின் ஆளுகைக்குள் மதுரை மேற்கை கொண்டு வந்திருக்கிறது திமுக.
இந்தத் தொகுதிக்குள் மூர்த்தியின் உறவினர்கள், விசுவாசிகள் அதிகம் இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் அதிமுக-வில் கட்சிக்கு விசுவாசமான தொண்டர்கள் அரிதாகி விட்டார்கள். பெரும்பாலும் வியாபாரிகள் தான் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
போதாக்குறைக்கு, கட்சியும் சிதறிக் கிடக்கிறது. இவை அனைத்தையும் நன்கு உணர்ந்து அதிமுக-வினர் களப்பணி ஆற்றினால் தான் தொகுதியைத் தக்கவைக்க முடியும். இல்லாவிட்டால், தனக்கு தெரிந்த வித்தைகளை பயன்படுத்தி தொகுதியை மூர்த்தி தட்டிப் பறித்தாலும் ஆச்சரியமில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...