Published : 06 Mar 2025 06:14 AM
Last Updated : 06 Mar 2025 06:14 AM
சென்னை: பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்ததற்கான ஆணை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் தகுதிகாண் பருவம் முடித்ததற்கான ஆணை வழங்கப்படவில்லை. அதோடு பணிவரன்முறையும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் முடித்ததற்கு ஆணை, உயர்கல்வித் தகுதி உடையவர்களுக்கு அடுத்த நிலை ஊதிய உயர்வு, முதல்வர் மற்றும் துறைத்தலைவர் பதவி உயர்வு பட்டியலை வெளியிடுவது, மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் முல்லை வளவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முல்லை வளவன் பேசும்போது, "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலங்களில் பணியாற்றி வரும் விரிவுரையார்களை உடனே பணிவரன்முறை செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி விரிவுரையாளர்கள் மாதாந்திர பயணப்படி கோரி விண்ணப்பித்து நீண்டகாலமாகக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான பயணப்படியை விரைந்து வழங்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோல், கிருஷ்ணகிரி, சேலம் வனவாசி, சங்கராபுரம், தேனி கோட்டூர், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் நேற்று கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆசிரியர்கள், காலை 7 மணிக்குத் தொடங்கி 9 மணிக்குள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment