Published : 05 Mar 2025 06:43 PM
Last Updated : 05 Mar 2025 06:43 PM
சென்னை: “தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்” என்று திமுக சாடியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது.
தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலினால் கூட்டப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரைக்கும் நடைபெற்றது. 63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ன்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைக் கோரினார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கூட்டுணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இன்றி கலந்துகொண்ட அனைவரின் குரல்களும் தமிழகத்தின் உரிமை காக்க ஒருமித்த கருத்தில் ஒன்றாக ஒலித்தன. கலந்து கொண்டவர்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்ததோடு தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்துக்கும் தங்களது ஆதரவையும் அளித்தார்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்து, நாடாளுமன்ற அவைகளில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க திட்டமிட்டிருந்த பாஜகவின் சதிக்கு எதிராக, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பு குரலும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான இந்த எதிர்ப்புக் குரல் திமுகவுடையது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைக் குரல் என்பது இன்று ஒன்றிய பாஜக அரசுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் உரிமைகளை காக்க வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழகத்தின் ஒற்றுமைக் குரல் ஒலிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது. நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழகத்தின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து நின்று இணைந்து போராடி வெற்றி பெற அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தென்னிந்திய மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். முதல்வரின் தலைமையில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாய் இணைந்து எழுச்சியுடன் போராடும்; இந்த உரிமைப் போராட்டத்தில் வெல்லும்!’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது.
முதல்வர் நன்றி - தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அநீதியான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. இதன்மூலம், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தெளிவான, சமரசமற்ற செய்தியை நாம் பதிவு செய்திருக்கிறோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில், 58 கட்சிகள் பங்கேற்றன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
> இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.
> நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
> நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
> தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
> தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
> இக்கோரிக்கைளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது.
> இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...