Last Updated : 05 Mar, 2025 10:17 AM

 

Published : 05 Mar 2025 10:17 AM
Last Updated : 05 Mar 2025 10:17 AM

“ரங்கசாமிக்கு மட்டும்தான் ஆதரவு... ஆட்சிக்கு இல்லை!” - புதுச்சேரி அரசியலை தெறிக்கவிடும் சுயேச்சை எம்எல்ஏ

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி. மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனரான இவர், 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர்.

அப்போது அரசு கொறடாவாக 5 ஆண்டு காலம் இருந்தவர், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் நின்று தோற்றுப் போனார். 2021-ல் என்.ஆர்.காங்கிரசை விட்டு விலகி சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற நேரு, ரங்கசாமி முதல்வராக வருவதற்கு ஆதரவளித்தார். ஆனால், முதல்வர் ரங்கசாமியை ஆதரித்தாலும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் தவறுகளை சுறுக் சுறுக் என்று சுட்டிக்காட்டினார். தடாலடி போராட்டங்களிலும் குதித்தார். இன்றளவும் அது தொடர்கிறது.

அண்​மையில் பேரவைத் தலைவர் செல்வத்​துக்கு எதிராக நம்பிக்கை​யில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் அளித்த நேரு, கடந்த 12-ம் தேதி சட்டப் பேரவை கூட்டம் கூடியபோது இதனை வலியுறுத்தி பேரவைக்​குள்ளேயே போராட்டம் நடத்தி​னார். இதனால் பேரவைத் தலைவர் அவரை சஸ்பெண்ட் செய்தார். ஆனாலும் ஆக்ரோஷம் குறையாமலே இருக்​கிறார் நேரு.

அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டு அரசுக்கு எதிராகவே இப்படி அதிரடிகளை கிளப்புவது முரண்பாடு இல்லையா? என்று நேருவிடம் கேட்டதற்கு, “திருத்​தம்... நான் ரங்கசாமிக்​குத்தான் ஆதரவு அளிக்​கிறேன். ஆளும் அரசுக்கு இல்லை. பாஜக-வுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வெச்சது பிடிக்​காமல்தான் நான் சுயேச்​சையாக போட்டி​யிட்​டேன்.

தேர்தலில் வெற்றி​பெற்ற ரங்கசாமி கரோனாவால் பாதிக்​கப்​பட்டு மருத்​துவ​மனையில் அட்மிட் ஆகி இருந்​தார். அந்த நேரத்தில் பாஜக-வை சேர்ந்த ஒருவரை முதல்​வ​ராக்க சதி நடந்தது. அதற்கு சுயேச்சைகள் உள்ளிட்ட எம்எல்​ஏ-க்கள் பலரும் ஆதரவு தெரிவித்​தனர். அந்த நேரத்தில் நான் ரங்கசாமிக்கு ஆதரவளித்து பாஜக முதல்வர் வருவதை தடுத்​தேன்.

புதுச்சேரி முழுவதும் இப்போது சட்டவிரோத செயல்​களும் பாலியல் வன்முறை​களும் அதிகரித்து வருகிறது. தொட்டது அனைத்​திலும் ஊழல். அமைச்​சர்களே தைரியமாக ஊழல் செய்கின்​றனர். புதிய மதுபான கொள்கைக்கு எதிராக நான் தான் முதலில் பேரவையில் குரல் எழுப்​பினேன்.

ஊழலற்ற புதுச்​சேரியை உருவாக்க வேண்டும், மக்களுக்கான பணிகள் துரிதமாக நடக்க வேண்டும், அரசும் அதிகாரி​களும் ஊழலில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே குறிக்​கோள். அந்த எண்ணத்தில் தான் சமூக அமைப்பு​களுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராட்​டங்களை நடத்தி வருகிறேன்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. உப்பனாறு வாய்க்கால் பாலம் புதுச்​சேரியின் அவமானச் சின்னமாக காட்சி​யளிக்​கிறது. மாநிலத்தில் 18-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்​தாலும் எவரும் பொதுவெளியில் வருவதில்லை; மக்களுக்குத் தேவையான பணிகளை செய்வது கிடையாது.

ஃபெஞ்சல் புயலின்போது ஆட்சியரை தவிர ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் வெளியே வரவில்லை. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்​காட்டு​வதால் பாஜக எம்எல்​ஏ-க்கள் என்னை ஆதரிப்​ப​தில்லை. பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை​யில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்​ததால் அவர்கள் என்னிடம் பேசினர்.

புதுச்​சேரியில் இதுவரை எந்தவொரு பேரவைத் தலைவரும் செய்யாததை செல்வம் செய்கிறார். நான் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். ஆளும் அரசை எதிர்ப்​பதால் எந்தவித ஆதாயமும் எனக்கு இல்லை. தமிழகத்தில் திமுக-​வினர் பாஜக-வை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்கின்​றனர். ஆனால் இங்கு, பாஜக கூட்டணி அரசை எதிர்க்க துணிவில்லாத எதிர்​கட்​சியாக திமுக உள்ளது. இங்குள்ள ஆட்சிக்கு எதிர்க்​கட்சி தான் முட்டுக்​கொடுத்துக் கொண்டு நிற்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x