Published : 04 Mar 2025 09:41 PM
Last Updated : 04 Mar 2025 09:41 PM

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை: 17 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக, 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு: சென்னை எழும்பூர் - மதுரைக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12635), எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் மதியம் 2.15 மணிக்கு புறப்படும்.

தாம்பரம் - ஐதராபாத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய சார்மினார் அதிவிரைவு ரயில் (12759), தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில், சென்னை கடற்கரையில் இருந்து அதேநாளில் மாலை 6.20 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் - ராமேஸ்வரத்துக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய சேது அதிவிரைவு ரயில் (22661), எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - புதுச்சேரிக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில் (66051), எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதேநாளில் காலை 7.10 மணிக்கு புறப்படும். காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (12606), தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

மன்னார்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16180), தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (12632), செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 8-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66052), தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

நேரம் மாற்றம்: சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20665), 15 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும். மொத்தம் 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x