Published : 04 Mar 2025 03:41 PM
Last Updated : 04 Mar 2025 03:41 PM

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த யாழ்ப்பாணம் எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி. சந்தித்துப் பேசினார். 

ராமேசுவரம்: இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டு கைதிகளாக உள்ளனர்.

இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப். 24 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களும் இலங்கையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள தமிழக மீனவர்களை சந்திக்குமாறு தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று சிறைச்சாலைக்கு சென்று மீனவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து யாழ்ப்பாணம் எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தங்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மீண்டும் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க வரமாட்டோம் என்று கூறினா். ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில் ஒருமுறை மட்டும் தான் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாட அனுமதி வழங்கப்பட்டதாத தெரிவித்தனர். மீண்டும் குடும்பத்தினருடன் பேசுவதற்கு அனுமதி பெற்று தருமாறு கேட்டுக் கொண்டனர்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x