Published : 28 Feb 2025 06:04 AM
Last Updated : 28 Feb 2025 06:04 AM

குடிநீர் குழாய் இணைப்பு பணி: 4-ம் தேதி 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: குடிநீர் குழாய் இணைப்பு பணி காரணமாக தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் வரும் மார்ச் 4-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதனால் மார்ச் 4-ம் தேதி காலை 10 முதல் 5-ம் தேதி காலை 10 மணிவரை வள்ளுவர் கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம், தென் சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இதன் காரணமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம் (பகுதி), தியாகராய நகர் (பகுதி), ராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் (பகுதி) ஆகிய இடங்களிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோடம்பாக்கம், தியாகராய நகர் (பகுதி), மேற்கு மாம்பலம், மேற்கு சிஐடி நகர், மேற்கு சைதாப்பேட்டை, அடையாறு மண்டலத்தில் சைதாப்பேட்டை (பகுதி) ஆகிய இடங்களிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.

அவசர தேவைக்கு.. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x