Published : 25 Feb 2025 05:53 AM
Last Updated : 25 Feb 2025 05:53 AM
காஞ்சிபுரம்: பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் பரந்தூர் வட்டார விவசாயிகள் நிலவுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்று விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசியது: தமிழக அரசு 2021-ம் ஆண்டு அளித்த வாக்குறுதிப்படி பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்கவில்லை.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க இனிவரும் காலங்களில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய நிலை வரும். அரசு கூறியபடி இந்தப் பிரச்சினை 5 ஆயிரம் ஏக்கரில் தீராது. மேலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தினால் மட்டுமே இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும்.
இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குறைவான பாதிப்புள்ள பகுதிகளில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். தங்களுடைய நில உரிமையை பாதுகாக்க போராடும் விவசாயிகள் மீது வழக்குகள் போட்டு அச்சுறுத்தக் கூடாது. வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். விமான நிலையம் அமைப்பதற்கு தகுதியான இடமா என்று ஆய்வு செய்வதற்காக போடப்பட்ட மச்சேந்திரன் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.நேரு தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன், பூவுலகு நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ‘பரந்தூர் பசுமை விமான நிலையத்தை அமைக்க நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், பரந்தூர் வட்டார விவசாயிகளும் சேர்ந்து ஏப். 15-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் போது முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம்’ என அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment