Published : 23 Feb 2025 09:22 AM
Last Updated : 23 Feb 2025 09:22 AM
தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் 3-வது மொழி கற்கலாம். ஆனால், ஏழை குழந்தைகள் கற்கக் கூடாதா? என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமாகாவின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை எழும்பூரில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர்கள் விடியல் சேகர், இ.எஸ்.எஸ்.ராமன், பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது: இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். பிப்.28-ம் தேதி மற்றும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் அடுத்தக்கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தைப் பார்த்தால் உண்மை நிலை மக்களுக்குப் புரிய வரும்.
தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் தவறான கருத்துகளை மத்திய அரசைப் பற்றி மாநில அரசு திரித்து சொல்லக் கூடாது. 3-வது மொழியை யாரும் படிக்கக்கூடாது என்று தெரிவித்தால், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை கற்க மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அரசியல். கட்டாயம் இந்த மொழி தான் கற்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கையில் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் தாய்மொழி தான் அவசியம்.
தமிழகத்தில் தமிழ்தான் முக்கியம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. 2-வது மொழி ஆங்கிலம். அதிலும் மாற்று கருத்து கிடையாது. அதே நேரம், வசதி பெற்றவர்கள் மட்டுமே 3-வது மொழி கற்கக்கூடிய சூழல் உள்ளது. ஏழை மக்களின் குழந்தைகள் இன்னொரு மொழியை கற்கக் கூடாதா?தங்களின் அரசியலை திணிப்பதற்காக மாணவர்கள் விஷயத்தில் தமிழக அரசு செயல்படுவது வருத்தமாக உள்ளது.
கூட்டாட்சி தத்துவத்தை இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமையை மறைப்பதற்கு திமுக அரசு, மொழி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...