Published : 23 Feb 2025 04:03 AM
Last Updated : 23 Feb 2025 04:03 AM
நாகப்பட்டினம்: எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதால், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் படகுகளை, எல்லை தாண்டி வந்ததாகக் குற்றம்சாட்டி பறிமுதல் செய்யும் இலங்கை அரசு, அவற்றை நாட்டுடைமையாக்கி ஏலம் விடும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2-வது முறையாக ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ராமேசுவரம் மீனவர்களின் 31 படகுகள், புதுக்கோட்டை மீனவர்களின் 14 படகுகள், கன்னியாகுமரி மீனவர்களின் 8 படகுகள், நாகை மீனவர்களின் 3 படகுகள், காரைக்கால் மீனவர்களின் 5 படகுகள் என மொத்தம் 67 படகுகளை ஏலம் விட உள்ளதாக இலங்கை நீரியல் வளத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தங்களின் படகுகளை மீட்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு பதில் அளித்து வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுத்து நிறுத்தி, தங்களது படகுகளை மீட்டுத் தந்து, வாழ்வாதாரத்தைப் பாதுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...