Published : 20 Feb 2025 08:36 PM
Last Updated : 20 Feb 2025 08:36 PM
சென்னை: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பதிவாளரை பணி நீக்கம் செய்தது செல்லாது எனக்கூறியுள்ள உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பதிவாளராக நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த பதிவாளர், நிதி அலுவலர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது பிரதிநிதித்துவ (டெபுடேஷன்) அடிப்படையில் நியமிக்க கடந்த 2017-ம் ஆண்டு டிச.15 அன்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய சசிகாந்த தாஸ் இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 2018 ஜூலை 5-ம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பல்கலைக்கழக செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 2019 பிப்.20 அன்று அவரை பதிவாளர் பணியில் இருந்து விடுவித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்காரணமாக அவர் மீண்டும் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக உள்ள பதிவாளர் பணியை நிரப்பும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தன்னை பதிவாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், பதிவாளர் பணியிடத்தை நிரப்ப புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டதை எதிர்த்தும் சசிகாந்த தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து சசிகாந்த தாஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி, “பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி ஒரு பணியாளரை பணி நீக்கம் செய்வதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும். ஆனால் மனுதாரரை பதிவாளர் பதவியில் இருந்து விடுவிக்கும் முன்பாக அதுபோல எந்த நோட்டீஸும் பிறப்பிக்கவில்லை. டெபுடேஷன் அடிப்படையில் பதிவாளராக நியமிக்கப்பட்ட மத்திய அரசு பணியாளரான மனுதாரரை இஷ்டம்போல பதவி நீக்கம் செய்ய முடியாது,” என வாதிட்டனர்.
அப்போது புதுச்சேரி பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ரவி, “மனுதாரர் நேரடி நியமனம் மூலமாகவே பதிவாளராக நியமிக்கப்பட்டார். அவர் டெபுடேஷன் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. அவரது விண்ணப்பத்திலும் அதுகுறித்து குறிப்பிடவில்லை. அதற்கான ஒப்புதலையும் அவர் பெறவில்லை,” என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளராக முறைப்படி நியமிக்கப்பட்ட மனுதாரை பாதியில் பதவி நீக்கம் செய்திருப்பது சட்டவிதிகளுக்கு எதிரானது. அந்த பதவி நீக்கம் செல்லாது என்பதால் அவரை 4 வார காலத்துக்குள் மீண்டும் பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்க வேண்டும்,” என மத்திய அரசுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment