Published : 19 Feb 2025 05:28 AM
Last Updated : 19 Feb 2025 05:28 AM

சமூகநலத் துறையின் பிங்க் ஆட்டோ திட்டம்: மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்

கோப்புப் படம்

சென்னை: சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க் ஆட்டோ' திட்டம் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூகநலத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆட்டோ வாங்குவதற்காக அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திட்டத்துக்கேற்ப மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, இது தொடர்பாக கருத்து கேட்பதற்காக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. .

இது தொடர்பாக அரசிதழில் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் கூறியிருப்பதாவது: சமூகநலத் துறையின் பிங்க் ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களே உரிமையாளராகவும் ஓட்டுநராகவும் இருக்கும் ஆட்டோவே பிங்க் ஆட்டோ எனப்படும். இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் பிங்க் நிற சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவுக்கு முழுமையாக பிங்க் நிறம் பூசப்பட வேண்டும்.

அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ், விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவுக்கான உரிமத்தை 5 ஆண்டுகள் வரை பெயர் மாற்றம் செய்ய இயலாது. இந்த வரைவு திருத்தங்கள் மீது 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x