Published : 26 Aug 2014 12:26 PM
Last Updated : 26 Aug 2014 12:26 PM

கிருஷ்ணசாமியே அழைத்தாலும் போக மாட்டேன்: புதிய தமிழகம் கட்சியின் போட்டி எம்எல்ஏ ராமசாமி அறிவிப்பு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியே அழைத்தாலும், அவரிடம் இனி போக மாட்டேன் என்றார் சட்டப்பேரவையில் அந்தக் கட்சியின் போட்டி உறுப்பினராகச் செயல்படும் ராமசாமி.

நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் மதுரையைச் சேர்ந்த ராமசாமி. புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். தொடக்கக் காலத்தில் ராமசாமியும், புதிய தமிழகம் கட்சித் தலைவரான கிருஷ்ணசாமியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். நாள டைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதிமுக கூட்டணியிலிருந்து கிருஷ்ணசாமி விலகிய நிலையில், ராமசாமி திடீரென முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். தொடர்ந்து, சட்டப்பேரவையில் அதிமுகவின் ஆதரவுடன் போட்டி புதிய தமிழகம் உறுப்பினராகச் செயல்படுகிறார்.

இந்நிலையில், திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி, தனது தொகுதி பிரச்சினைகள் தொடர் பாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தினார்.

பின்னர், வெளியே வந்து செய்தி யாளர்களிடம் ராமசாமி கூறும் போது, ‘எனது தொகுதி பிரச்சினை கள் தொடர்பாக 3 மாதங்களுக்கு முன் மனு கொடுத்திருந்தேன். தற்போது அந்தக் கோரிக்கைகளை ஆட்சியரிடம் நினைவுபடுத்த வந்தேன்’ என்றார்.

அப்போது, செய்தியாளர்கள் கிருஷ்ணசாமி உங்களிடம் பேசு கிறாரா? என்றனர்.

அதற்கு ராமசாமி, ‘அவருடன் பேசி 8 மாதங்கள் ஆகிவிட்டன. சட்டப்பேரவையில் எனது இருக்கை அருகேதான் அவர் அமர்ந்திருப்பார். அவரும் என் னிடம் பேச மாட்டார், நானும் அவரிடம் பேச மாட்டேன்.

கிருஷ்ணசாமியே அழைத் தாலும் இனி நான் அவரிடம் போக மாட்டேன். நான் புதிய தமிழகத்தை விட்டு விலக வில்லை. அவர்கள்தான் எனக்கு மரியாதை தருவதில்லை. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தால்தான் புதிய தமிழகம் வெற்றி பெற்றது. இதை கிருஷ்ணசாமி புரிந்து கொள்ளவில்லை. என் மீது மோசடி வழக்கு போட வைத்தார். அதற்குப் பிறகு அவருடன் எப்படி பழக முடியும்? என்னை யாரென்றே தெரியாமல் நிலக்கோட்டை மக்கள் ஜெயிக்க வைத்தனர். அந்த மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன்’ என்றார்.

ராமசாமிக்கு ராஜ மரியாதை

கடந்த சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப் பினர் பாலபாரதி, மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார். அப்போது, ஆட்சியர் ந. வெங்கடாசலம் அவரை நிற்க வைத்தே மனுவை வாங்கிக் கொண்டு பேசி அனுப்பிவைத்தார்.

ஆனால், திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் வந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமியை, ஆட்சியர் தனது இருக்கை அருகே அமரவைத்து, அவர் கூறிய பிரச்சினைகளை கவனமாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தனக்கு அளிக்கப்பட்ட மரியாதையைக் கண்டு ராமசாமியே உச்சிக் குளிர்ந்தார்.

அப்போது, அவரே செய்தியா ளர்களிடம், ‘நான் பாதுகாப்பு கேட்காமலே 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு, எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் பாருங்க சார். எனக்கு இந்த மரியாதையே போதும் சார். முதல் வருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x