Published : 14 Feb 2025 08:32 PM
Last Updated : 14 Feb 2025 08:32 PM
சென்னை: பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு நீதிமன்றத்தை செல்வப்பெருந்தகை அவமதிக்கிறார் என தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் நடப்பவை அக்கட்சியின் உள் விவகாரம். அதிமுகவைச் சேர்ந்தவர்களும், அதிமுகவில் இருந்தவர்களும்தான் வழக்கு தொடுத்துள்ளனர்.
அதில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இருக்கவும் முடியாது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘அதிமுக உட்கட்சி விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் பாஜக இருக்கிறது’ என போகிற போக்கில் புழுதிவாரி தூற்றியிருக்கிறார். பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். இது கடும் கண்டனத்துக்குரியது. நீதிபதிகளை நியமனம் செய்வது மத்திய அரசு அல்ல.
உச்ச நீதிமன்றம் அமைக்கும் சில நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் என்ற குழுதான் நீதிபதிகளை தேர்வு செய்கிறது. இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.
தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பவர்கள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்த வரலாறுகள் ஏராளம் உண்டு. எனவே, செல்வப்பெருந்தகை எச்சரிக்கையாக பேச வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...