Last Updated : 14 Feb, 2025 06:31 PM

 

Published : 14 Feb 2025 06:31 PM
Last Updated : 14 Feb 2025 06:31 PM

பழநியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: பழநி நெய்க்காரன்பட்டியில் பிப்.22-ல் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பழநி நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மின்வாரியச் சாலையில் பிப். 16-ல் சீமான் பங்கேற்கும் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தோம். இந்நிலையில் தைப்பூசத்தை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்து போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். எனவே போலீஸாரின் உத்தரவை ரத்து செய்து, பிப். 16-ல் மின்வாரிய அலுவலகச் சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும், ’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சி சார்பில், “பிப்.16-ல் பொதுக்கூட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த இடத்தில் தான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும். நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.

அரசுத் தரப்பில், “மனுதாரர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கும் இடத்திலிருந்து 50 அடி தொலைவில் பெரியார் சிலை அமைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இதனால் பல இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. பொதுக்கூட்டம் நடத்தினால் பக்தர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். ஆயக்குடியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரினால் அனுமதி வழங்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், பழநி மின்வாரிய சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்து, தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருவதால் மின்வாரிய சாலைக்கு பதில் வேறு இடம் தேர்வ செய்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதி கூறினார்.

இதையடுத்து பழநி அருகேயுள்ள நெய்க்காரன்பட்டி பங்களா தெருவில் பொதுமக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நெய்க்காரன்பட்டி பங்களா தெருவில் பிப்.22-ல் நாதக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x