Published : 13 Feb 2025 03:37 PM
Last Updated : 13 Feb 2025 03:37 PM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றுக்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.13) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றுக்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான அரசால் 2007-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–I இன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 3.1 லட்சத்துக்கும் மேல் பயணம் செய்து வருகின்றார்கள்.
அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலைய பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தல்: அதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II-இன் கட்டுமானப் பணிகள், 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டம்-II-இல் மொத்தம் 42.6 கி.மீ நீளத்திலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வழித்தடம் 3-இல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாதவரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் –தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.
பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமான பாறைகள், அதிநீரோட்ட பகுதிகள் மற்றும் நகர்புறத்துக்கென இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக சந்தித்து, அடையாறு என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜுன் 2023-ல் சுரங்கம் தோண்டும் பணிகளை கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி, அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையத்துக்கு அருகில், அடையாறு ஆற்றின் கீழ் சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு அடையாறு ஆற்றுக்கு கீழ் செல்லும் வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளி வந்தது. செப்டம்பர் 2024-ல் காவேரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், டவுன்லைன் சுரங்கம் தோண்டும் பணியினை முடித்துள்ளது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது. இந்த முக்கியமான பணியினை முதல்வர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment