Published : 13 Feb 2025 02:41 PM
Last Updated : 13 Feb 2025 02:41 PM
சென்னை: “வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் வகையில் மாணாக்கருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை எனக்கூறி அரசியல் செய்ய இடமளிக்கக்கூடாது.” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி இன்று (பிப்.13) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு துவக்கத்தில், ஜுன் மாதத்தில் தொண்டு நிறுவனங்கள், காவல்துறை, சமூக நலத்துறை மூலம், ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வுகளுடன் கூடுதலாக, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் வகையில் மாணாக்கருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை எனக்கூறி அரசியல் செய்ய இடமளிக்கக்கூடாது.
பாலியல் புகார் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மீது, 238 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் 11 பேர் மீதான வழக்கில், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு 7 பேர் வரை இறந்துவிட்டனர். வரும் மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு, 56 பேர் மீதான வழக்குகளில் இறுதி உத்தரவே வரவிருக்கிறது. இது இல்லாமல், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு பரிசீலனையில் இருந்து வருகிறது.
எனவே, எந்த பணிகளையும் நிறுத்தவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை. மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment